கழகங்கள் இல்லாத தமிழகம் என்பது பா.ஜ.க.வின் கனவாக மட்டும் இல்லாமல் பா.ஜ.க.வை எதிர்ப்பதாகப் பாசாங்கு செய்பவர்களின் இலட்சிய மாகவும் வெளிப்பட்டுள்ளது. கழகங்கள் என இவர்கள் கூறுவது திராவிட இயக்கங்களையே என்பது வெளிப் படையானது . திராவிட இயக்கங்களை பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவாரத்தினர் மிகக்கடுமையாக எதிர்ப்பதற்கு முக்கியக் காரணமே அதன் சமூகநீதிக் கோட்பாடும் அந்த வழித்தடத்தில் நின்று அது நிகழ்த்திய சாதனைகளும்தான்.
தமிழகத்தில் திராவிட இயக்கமல்லாத விடுதலைச் சிறுத்தைகள், த.மு.மு.க, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்காகக் களமாடும் இயக்கங்களுக்கும் சமூகநீதியே அடிப்படைக் கோட்பாடாக உள்ளது.
திராவிட இயக்கங்களை எதிர்ப்பவர்கள் திராவிட என்ற பெயரைத் தாங்கியிராத சமூகநீதிக் கோட்பாடுடைய இயக்கங்களையும் சேர்த்தே எதிர்க்கிறார்கள் என்பதையும் உணரவேண்டும்.
சமநீதிக்கும், மனுநீதிக்குமான போராட்டம் இம்மண்ணில் பல நூற்றாண்டுகளாய் நிகழ்ந்து வருகிறது. திராவிட இயக்க எழுச்சிதான் மனுநீதியை இம்மண்ணில் வீழ்த்தி சமநீதியின் சகாப்தத்தைத் தமிழகத்தில் தொடங்கி வைத்தது. சங்பரிவாரங்களின் அகண்ட பாரதக் கோட்பாட் டில் மாநில உரிமைகள் இருக்குமா? என்பதைவிட மாநிலங்களே இருக்குமா? என்பது சிந்தனைக் குரியது.
மாநில உரிமைகளையும், மாநில சுயாட்சி யையும் ஓங்கி முழங்கிய திராவிட இயக்கங்கள் அதன்மூலம்தான் சமூகநீதியின் மைல்கற்களை இம்மண்ணில் பதித்தன. இந்திய அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு அளித்துள்ள உரிமைகளையெல்லாம் தானே சுருட்டிக்கொள்ளத் துடிக்கிற மத்திய பா.ஜ.க. அரசு, கல்வியில் தன்னாட்சி பறிப்பையும், மைய அதிகாரக் குவிப்பையும் முதன்மைச் செயல்திட்டமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிகமான மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில்தான் உள்ளன. ஆனால் தமிழர்கள் அதில் அதிகம் இடம் பெற்றுவிடக்கூடாது என்பதற்கு ‘நீட்’ தேர்வைக் கொண்டு வந்து எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நிர்மூலமாக்கியது மத்திய பா.ஜ.க. அரசு. அது உருவாக்கியுள்ள தேசியக் கல்விக் கொள்கைகள் எளிய மக்களை முற்றிலுமாகக் கல்வியிலிருந்து வெளியேற்றவே வழிவகுக்கிறது. இதை ஏற்காத சமூகநீதி இயக்கங்களை அடியோடு அழித்திடத் துடிக்கிறது.
கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைத்துள்ள புதிய இந்தியாவுக்கான(?) தேசியக் கல்விக் கொள்கை 2035ஆம் ஆண்டில், 18 முதல் 23 வயதினரின் GER (Gross Enrollment Ratio)உயர் கல்வி இணைவு விகிதம் 50% இலக்கை எட்டவேண்டும் என்கிறது.
தமிழ்நாடு இப்போதே 50% விழுக்காட்டை எட்டிவிட்டது. உயர்கல்வியில் இணைபவர்களின் விழுக்காடு பிற மாநிலங்களில் எவ்வாறு உள்ளது.?
இந்துத்துவத்தின் சோதனைச் சாலையான குஜராத்தில் வெறும் 22%தான். கலவர நாயகன் யோகி ஆதித்யநாத் ஆளும் உ.பி.யில் 24.2%தான். ராஜஸ்தானில் 23.1%தான். தேசிய சராசரிகூட 26.3%தான். ஆனால் திராவிட இயக்கங்கள் தொடர்ந்து ஆண்ட தமிழகத்தில் 49%ஐ இது தாண்டி நிற்கிறது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலில் தமிழகத்தின் 37 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. குஜராத்தின் 3 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. ம.பி., உ.பி., உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஒரு நிறுவனம்கூட இந்தப் பட்டியலில் இடம்பெற வில்லை.
இந்தியாவின் சிறந்த 100 பல்கலைக் கழகங்களில் இடம்பெற்றுள்ள தமிழகப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 24, குஜராத்திலிருந்து 2, உத்தரப்பிரதேசத்திலிருந்து 7, ராஜஸ்தானிலிருந்து 4, ம.பி.யிலிருந்து ஒன்றுகூட இல்லை. சமூகநீதிக் கோட்பாடு சார்ந்த அரசியல் ஒரு மண்ணை எப்படி முன்னேற்றும் என்பதற்கும், பா.ஜ.க. தாங்கிப் பிடிக்கும் சமூக அநீதிக் கோட்பாடு எப்படி தேசத்தைப் பாழ்படுத்தும் என்பதற்கும் மேற்கண்ட புள்ளிவிவரங்களே போதுமான சான்றுகள்.
திராவிட இயக்கப் பொருளாதார நிபுணர் முனைவர் வெ.சிவப்பிரகாசம் தனது "திராவிடர் இயக்க சமூக, அரசியல் பொருளாதாரச் சிந்தனையும் செயல்பாடும்' என்ற நூலில், பொதுச் சுகாதாரம், ஊட்டச்சத்து, பொருளாதாரம் ஆகியவற்றில் இந்தியாவின் பிற மாநிலங்களை விட குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை விட தமிழகம் எவ்வளவு உயர சிகரத்தில் இருக்கிறது என்பதை புள்ளிவிவரங்களுடன் துல்லியமாகப் புலப்படுத்தியுள்ளார்.
நீதிக்கட்சி சிறிய அளவில் தொடங்கி, பெருந்தலைவர் காமராசரால் பெருந்திட்டமான மதிய உணவுத் திட்டம், எம்.ஜி.ஆரால் சத்துணவுத் திட்டமாக வளர்ந்து, ஆறு நாட்களும் முட்டையுடன் கூடிய உணவாக கலைஞரால் விரிவு செய்யப்பட்டு 13 வகை கலவை சாதங்களுடனான உணவாக பரிமாற்றம் பெற்று ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து குழந்தைகளைக் காத்துள்ளது. உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாகாணம் அதிலிருந்து மீண்டு இந்நிலையை அடைய சமூகநீதிக் கருத்தியலே காரணம்.
மோடி அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை, குறைந்த ஊதியத்தில் குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்கும் கூடங்களாகப் பள்ளிகளை மாற்றிவிடும் என்று குற்றம்சாட்டுகிறார் கல்வியியல் சிந்தனையாளரான பிரின்ஸ் கஜேந்திரபாபு.
ஆதிக்க வெறிபிடித்த ஆரிய மனுவாதிகள், கழகங்கள் இல்லாத தமிழகம் என்று கதறுவதற்கும், பதறுவதற்கும் வேறு காரணங்களும் வேண்டுமோ?